பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு டியூஷன் என்கிற தனிப்பயிற்சி தேவையா? தேவையெனில் எப்போது இருந்து ? ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் டியூஷன்? இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன ?தீமைகள் என்ன? என்பதைப்பற்றி இப்போது காண்போம்.
இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களுடைய முதல் கவலை குழந்தைக்கு நல்ல பள்ளிக்கூடத்தில் இடம் பிடிப்பது ,பிறகு சிறந்த ஆசிரியர் வகுப்பில் இருப்பது, அதிக மதிப்பெண் பெறுவது, பள்ளிக்கூடத்தில் மாவட்டத்தில் ,மாநிலத்தில் என ரேங்க் பெறுவது என்பதுதான். கல்வி ஒன்று தான் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைத் தரும் என்பது இன்றைய நிதர்சனமான உண்மை. முக்கியமாக மேல்நிலைப் பள்ளியின் இறுதியில் பெறும் மதிப்பெண்களும் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களும் தான் அவர்களுடைய வாழ்க்கையின் போக்கை தீர்மானிக்கும் சக்திகளாக உருவெடுத்து இருக்கின்றன. இதற்கான ஆயத்த வேலை குழந்தை பிறந்த உடனேயே சில ஊர்களில் ஆரம்பித்து வருகிறது.
பல நேரங்களில் பள்ளி முன் பருவக் கல்வி என்பது என்னவென்றே தெரியாத பெற்றோர் ஆசிரியர் , நிர்வாகங்கள் . கனவு காணும் எதிர்கால நன்மைக்காக,குழந்தையின் நிகழ்காலம் சிதைக்கப்படுகிறது.பள்ளி முன் பருவக் கல்வியிலேயே குழந்தை எழுத வேண்டும் படிக்க வேண்டும் ,பாட வேண்டும் ,அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் என்ற பெற்றோர்களினுடைய அதீத எதிர்பார்ப்புகள் . பணிந்து போகும் நிர்வாகத்தினரின் நடவடிக்கைகள் குழந்தைப் பருவத்தினைச் சிதைக்கும் கருவிகளாக உருவெடுக்கின்றன. இதில் முக்கியமானது டியூஷன் என சொல்லப்படும் தனி வகுப்பு .அதுவும் பெற்றோர்கள் கல்வி அறிவு குறையப் பெற்றவர்களாக இருந்தால் அல்லது சொல்லிக்கொடுக்க போதுமான நேரம் இல்லாமல் இருந்தால் தனி வகுப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இத்தனைக்கும் கால் கிளாஸ் அரை கிளாஸ் அதுதான் எல்கேஜி யுகேஜி, கொடுக்கும் வீட்டுப்பாடம் ஏபிசிடி 1 முதல் 10 வரை தான் அதற்கு கூட டியூஷன் என்பது பெற்றோர்களுடைய மனதில் பதிந்து விட்ட.து இதைத் தவிர அந்த வயதுக் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டு பாடத்தை முடிக்கவும் அடுத்த நாள் வகுப்பு ஆசிரியரிடம் திட்டு வாங்காமல் இருக்க இது உதவுகிறது.பல நேரங்களில் வகுப்பு ஆசிரியரே டியூஷன் எடுப்பதால் திட்டு கிடைப்பதில்லை.
வகுப்புகள் அதிகமாக படிப்படியாக டியூஷன் செல்லும் நேரம் அதிகரிக்கிறது காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மறந்து போய் காலை எழுந்தவுடன் வீட்டுப் பாடம் ,பின்பு அவசர அவசரமாக பள்ளிக்கூடம் , மாலை திரும்பி வந்தவுடன் விளையாட்டுக்கு இடம் இல்லை வேறு வேலைகளுக்கும் இடமில்லை. குழந்தைக்கான பொழுதுபோக்குக்கும் நேரமில்லை .மறுபடியும் திறன்வகுப்புக்காக சென்று இரவு 8 மணிக்கு மேல் வீட்டுக்கு திரும்பி வரும் குழந்தைகள் தான் எக்கச்சக்கம். குழந்தையின் விளையாட்டு நேரம் பெற்றோரிடம் செலவழிக்கும் நேரம், கற்றுக் கொள்ளும் நேரம் ,பொழுதுபோக்குகளுக்கான நேரம் ஆகியவை அத்தனையும் இந்த டியூஷன் தனி வகுப்புகளால் பறிக்கப்படுகின்றன அதற்கு மேல் வீட்டுக்கு வந்தவுடன் திரை நேரம் மீதமுள்ள காலத்தை கபளீகரம் செய்து விடுகிறது
எனவே இந்தக் குழந்தைகள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை வெறும் புத்தகத்தை கட்டிக்கொண்டு அழும் இயந்திர மனிதர்களாகி விட்டார்கள் பள்ளிக்கூடத்தில் தினசரி தான் பெறும் அனுபவங்கள் அவைகளின் கசப்பு மற்றும் இனிப்பான தருணங்கள் இவைகளைப் பகிர்ந்து கொள்ளும் நேரம் ,பெற்றோரிடம் செலவழிக்கும் காலம், விளையாடுவதற்கு ,நண்பர்களை உருவாக்கிக் கொள்வதற்கு ,பொழுதுபோக்குகளில் கவனத்தைச் செலுத்துவதற்கு மனதை லேசாக தளவா.க வைப்பதற்கு என நேரமில்லாமல் போய்விடுவதால் இக்குழந்தைகள் வெறும் மனப்பாட இயந்திரங்களாக மாறிவிட்டனர்.
உங்கள் குழந்தைக்கு இரண்டு வகுப்பு வரை பள்ளிக்கூடத்தில் வீட்டு பாடங்கள் தரக்கூடாது என்பது அரசின் ஆணையாக இருந்தாலும் அனைத்து பள்ளிக்கூடங்களிலும் வீட்டுப்பாடம் என்பது பெற்றோர்களாலும் பள்ளி நிர்வாகத்தினாலும் திணிக்கப்படும் ஒன்றாக மாறிவிட்டது. இரண்டாம் வகுப்பு வரை குழந்தை பாடத்தை தவிர தன்னைச்சுற்றியுள்ள இடத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவரோடு பழகத் தெரிய வேண்டும். உணர்வுகளை அறிந்து வெளிப்படுத்திக் கொள்ள அறிந்து கொள்ள வேண்டும். மனத்தளர்வு ஏற்படாமல் தடுக்க விளையாட வேண்டும் என்பதெல்லாம் மறந்து போய் வெறும் பாடம் ஒன்றுதான் முழு நேர வேலை என்று ஆகிவிட்டது எனவே இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தருவதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். வீட்டு பாடம் தரும் பள்ளிக்கூடங்கள் அரசினரால் எச்சரிக்கப்பட்டுத் திருத்தப்பட வேண்டும் .மாநில கல்வி மற்றும் சிபிஎஸ்சி கல்வி வாரியங்கள் இது சம்பந்தமாக சுற்றறிக்கைகள் அனுப்பி இருந்தாலும் இதுவரை காகிதத்தில் தான் அவை இருக்கின்றன பரவலாகப் பின்பற்றப்படுவதில்லை
நிறையத் தனிப்பயிற்சி ,வகுப்பு ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது அதில் சேரும் மாணவர்கள் வகுப்பில் தனியாக கவனிக்கப்படுகிறார்கள். மாணவர்களுக்கும் தனிப்பயிற்சி போதும் பள்ளிக்கூடத்தில் கவனிக்க வேண்டாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது ஆசிரியரும் ஒரேபாடத்தைபள்ளிக்கூடத்தில் நடத்திவிட்டு மீண்டும் தனிப்பயிற்சி வகுப்பில் நடத்தும் போது குழந்தைகளுக்கு அந்ததனிப்பயிற்சிமேல்தான் ஆசை வருகிறது.வகுப்பில் கவனம் செலுத்துவதில்லை ஆசிரியர் பாடம் நடத்தும் போது மற்றவர்களைச்சீண்டுதல் ,பேசுதல் ,ராக்கெட் விடுதல் உட்பட அவர்கள் கவனம் சிதற இருக்கிறார்கள பள்ளிக்கூடத்தில்ஆசிரியருக்கும் பாடத்தைச் சுவையாக நடத்துவதில் ஆர்வம் குறைந்து விடுகிறது விட்டு விட்டால் பரவாயில்லை டியூஷனல் கற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் குழந்தைகளுக்கு வந்துவிட்டால் பள்ளிக்கூடங்களுக்கு என்ன இடம் ?என்பது கேள்விக்குறியாகி விடுகிறது
தனி வகுப்பு எடுக்கும் வீடுகள் அனேகமாக ஆசிரியரின் வீடாகவேஇருக்கும் .ஆசிரியர் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொண்டு அல்லது வீட்டு வேலை செய்து கொண்டு வீட்டு பாடத்தை எல்லாரையும் எழுத ச்சொல்வதுதான் முக்கியமான தனிப்பயிற்சி யாக இருக்கிறது . ஒருமுறை பாடத்தை படித்துக் காட்டுகிறார் அதற்கு பிறகு குழந்தையை எழுதச் சொல்லுகிறார்.இப்படியே இரண்டுமணி நேரம் பறந்து போய் விடுகிறது. இந்த நேரம் குழந்தைகளுக்கு விளையாடுவதற்கும் தானே கற்றுக் கொள்வதற்கும் இயற்கையை ரசிப்பதற்கும் பல கலைகளை அறிந்து கொள்வதற்கும் பயன்படுத்த வேண்டிய நேரம் . இந்த மாதிரி திருப்பித் திருப்பி கற்பது கற்றலில் சிரமங்கள் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் இருந்தால் போதுமானது . அவர்களுக்கும் கூட பல்வேறு வேறுபட்ட முறைகளில் சொல்லித் தருவதுதான் நல்லது.அனைத்து குழந்தைகளுக்கும் தனிப்பயிற்சி யினைத்திணிப்பது இயந்திரத்தனமான கற்றலை இயல்பாக்கி விடுகிறது அதனால் குழந்தைகளுக்கு படிப்புதவிர வேறு எதைப் பற்றியும் தெரிவதில்லை.
ஆராய்ச்சி மனப்பான்மை புதியவிஷயங்களை தெரிந்து கொள்ளுதல் என இயற்கையிலேயே துறுதுறுவென்று இருக்கும் குழந்தையின்மனது நொந்து நூலாகி விடுகிறது .கேள்வி கேட்கும் தன்மை, பதில்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அடியோடு புதைக்கப்படுகின்றன, சொல்லிக்கொடுத்தவைகளை திருப்பித் திருப்பி மனப்பாடம் செய்து ஒப்புவிக்கப்பட்டு வரிசை மாறாமல் படித்து ,பேசாமல் எழுதிப் பழகி ரோபோக்களாக மாறி விடுகின்றனர்.தனிப்பயிற்சி தேவைப்பட்டால் அதுவும் மேல் நிலைப்பள்ளி வகுப்புகளுக்கு ஒன்பது வகுப்பிற்குப்பிறகு மட்டுமே தனிப்பயிற்சி எடுப்பது நல்லது. இந்த தனிப் பயிற்சியும் தேவைப்படும் பாடங்களில் மட்டும் இருந்தால் நல்லது .குழந்தைக்குக் கணிதம் ஆங்கில மொழிப் பாடங்களில் பிரச்சனை இருக்கலாம். அதற்குறிய தனிப் பயிற்சி வகுப்புகள் மற்றும் கலந்து கொள்வது அந்த குறிப்பிட்ட பாடத்தில் மேலும் மதிப்பெண்கள் பெற உதவும். புரிந்து கொள்ள உதவும்.
இதை விடுத்து அனைத்து மாணவர்களும் தினம் தினம் 3 ஆசிரியரிடம் தனிப் பயிற்சிக்காக செல்வது, அதே பாடத்தை பள்ளிக்கூடத்தில் நடத்துவது, அல்லது மாற்றி மாற்றி நடத்துவது என்பது குழந்தைக்கு இரு தடவை படிக்கும் வேலையாக மாறிவிடுகிறது
ஐஐடி ஜே இ நீட் போன்ற தேர்வுகளுக்கு இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து பல பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன இதனுடன் பெற்றோர்களின் ஆசைக்காக சதுரங்கம்’ விளையாட்டு நீச்சல் டென்னிஸ் பேட்மின்டன் உடன் ஹிந்தி சமஸ்கிருதம் பிரென்ச் போன்ற மொழிப்பாடங்கள் நடனம் பாட்டு முதலிய நுண்கலைகள் என அனைத்திற்கும் நேரம் செலவாகிறது. குழந்தைக்கான நேரம் என்பது குறுக்கலாக்கப்படுகிறது தன் எண்ணத்தை பகிர்ந்து கொள்ள பெற்றோர்களும் ,பேச குழந்தைகளுக்கு நேரமும் காலமும் கிடைப்பதில்லை.