childhealthtoday-childhealth wiki

குழந்தை நலம்;குடும்ப பலம்

https://youtu.be/R1qhBbZaG3g?si=GECtBf6z8nBqfjKS

 

 

 

 

 

 

 
குழந்தைக்கு ஆறு மாதம் கழிந்த பின்னர் எல்லா தாய்மார்களுக்கும் பிறக்கும் கேள்வி அடுத்து என்ன உணவைத் தருவது என்பதுதான். இதில் தான் எத்தனை வகையான அறிவுரைகள்!! உலகில் மனிதர்கள் எண்ணிக்கை எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு உணவு வகைகள் மாறுபடுகின்றன. அம்மா ,மாமியார் ,உறவினர்கள், தங்கள் குடும்பத்தின் உணவு பழக்கம், தன் சமூகத்தில் மற்ற அனைவரும் என்ன தருகிறார்கள் ?குழந்தை மருத்துவரின் புரிதல் அவர் ஆலோசனைகள் என பல விஷயங்களை பொறுத்து தான் தாய்ப்பாலுடன் சேர்ந்து தரும் இணை உணவு அமையும்



இணை உணவை எப்போது தர வேண்டும்? ஏன்?



குழந்தைக்கு ஆறு மாதம் முடிந்த பின்னர் சுரக்கும் பாலின் அளவு குறைய ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் குழந்தைக்கு இணை உணவினை தர ஆரம்பிப்பது மிக முக்கியம் .இணை உணவினைத் தருவதற்கு முன் குழந்தையின் தலை நின்று இருக்க வேண்டும். நாக்கு துருத்தி வெளியே தள்ளுவது இருக்கக் கூடாது உணவினை நாம் உண்ணும் போது சாப்பிட கைதுலாவுதல் ,கையை வாய்க்கு கொண்டு செல்லுதல் உணவினைக் கேட்டல் , குழந்தையின் விருப்பத்தினை புரிந்து கொள்ள உதவும். .உமிழ்நீர் சுரப்பு குழந்தையின் உணவு மண்டலம் சீரணிப்பதற்கு தயாராக இருப்பதை நமக்குச் சொல்லும்



பாரம்பரியமாக என்ன உணவுகள் தரப்படுகின்றன?







அரிசிக் கஞ்சி, ராகிக் கூழ் என ஆரம்பித்து அதில் உப்பு சேர்ப்பதற்கு பதிலாக சர்க்கரை சேர்த்து தொடங்கும் .பிறகு அந்த உணவினை சிறிது சிறிதாக கெட்டியாக்கி, உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள் என வேகவைத்து பிஸ்கட்டை பாலில் நனைத்து, பால் சோறு ,நெய் சோறு உப்புக்கல் சாதம் எனக் கொடுப்பர். பாலோடு இட்டிலி பாலோடு சோறு என்று தொடரும் இனிப்பு உள்ள உணவுகளை மட்டும் ஆறிலிருந்து 9 மாதத்திற்குள் தந்து பழகினால் குழந்தை வேறு எந்த உணவையும் உண்ணாது தினந்தினம் ஒரே உணவு ,ஒரே ருசி ,வாயில் வைத்தால் வாந்தி எடுக்க முயற்சிக்கும். இதில் கையை காலை அழுத்தி பிடித்து வாய் திணித்தால் சில நேரங்களில் நுரையீரலுக்குள் செல்லும் ஆபத்து இருக்கும்



வெளிப்பால், தயிர் உணவை தர குடல் சீரணத்திற்குத் தரவேண்டுமா?



நாட்டு மாட்டுப் பால் குழந்தைக்கு நல்லது நதாய்க்கும் நல்லது என லிட்டர் கணக்கில் பால் தரும் பெற்றோர்கள் உள்ளனர். ஏ ஒ ன் மாட்டுப்பால் ஏடூ மாட்டுப்பால் என எதுவும் இரண்டு வயது வரை குழந்தைக்குத் தேவையில்லை. ஏ ஒ ன் பாலிலே கூட ஏடூ மாட்டுப் பாலின் சத்துக்கள் பெரும்பாலானவை உள்ளன. குடல் சீரணத்திற்கு தயிர் பால் தர தேவை இல்லை. தாயின் பாலே, இரைப்பையினைத் தாண்டி செல்லும்போது தயிராக மாறி நல்ல நுண்உயர்களுக்கு உதவி செய்யும் எனவே பாலோ ,பால் பொருட்களோ தேவையில்லை ஒரு வயதிற்கு மேல் தாய்ப்பால் குழந்தைக்கு தேவையான சத்தில் மூன்றில் ஒரு பங்கு சத்தினை ஐந்து வயது வரை தந்துவிடும்



என்ன மாதிரியான உணவுகள் தர வேண்டும்?



வீட்டு உணவை சமைக்கும் போது இனிப்பு சேர்க்காமல் காரம் சேர்க்காமல் எடுத்து வைத்து கையால் பிசைந்து தந்தால் போதும். தினம் தினம் நாம் உண்ணும் உணவின் வித்தியாசமான ருசி குழந்தைக்கு உணவின் மேல் ஆசையை தூண்டி விட உணவிற்கான செலவும் தனியாக தயாரிக்கும் நேரமும் மிச்சம் .குழந்தைக்கு தரும் உணவில் அனைத்து சத்துக்களும் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது மிக முக்கியம்







பல் இல்லாத குழந்தை உணவை எப்படி சாப்பிடும்?



பல் இல்லாவிட்டால் என்ன ?குழந்தையின் ஈறு எந்த உணவையும் கடித்து அதை கூழாக்கி சாப்பிட உதவும். சந்தேகம் இருந்தால் தாய்ப்பால் ஊட்டும் தாயைக் கேட்டுப் பாருங்கள் .குழந்தை விளையாட்டாகக் கடிக்கும் போது எப்படி வலிக்கும் என்று . எலும்புகளை மட்டும் தவிர்த்தால் போதும் பல்லின் அரைக்கும் தன்மை கிடைக்காது அதற்காக மிக்ஸியில் மத்தில் கடைந்து தர வேண்டியதில்லை ஒரே மாதிரி உணவை கடைந்து தரும் போது ருசிமாறிவிடும். ஒரே ருசி உள்ள உணவை தினமும் சாப்பிட குழந்தை விரும்பாது .ஒவ்வொரு உணவுக்குள்ள தனிப்பட்ட சுவையும் இருக்காது .புதுப்புது அனுபவங்கள் உணவின் ருசிகள் தெரியாத போது குழந்தை உணவினைந் தவிர்க்கப் பார்க்கும்.



கீரை பருப்பு தரும் போது சீரணமாகுமா?



குழந்தைக்கு வாயில் உமிழ்நீர் சுரப்பு வரும்போது குடல் செரிப்பதற்கு தயாராக இருக்கிறது என்ற செய்தியை நாம் அறிந்து கொள்ளலாம். ஆரம்பத்தில் கீரையோ பழங்களையும் தரும்போது அவை அப்படியே மலத்தில் வரலாம். கவலைப்பட வேண்டாம் நாட்கள் செல்லச் செல்ல அவை செரித்து ஆகி விடும்



குழந்தைக்கு தரும் இணை உணவின் அளவு? எப்படி? எவ்வளவு தரலாம்?



குழந்தைக்கு தேவையான இணை உணவினை தேக்கரண்டியிலோ அல்லது கையிலோ பிசைந்து தரலாம் கரண்டியில் தருவது சிலருக்கு பிரச்சனையாக இருக்கலாம் .அப்படி இருப்பின் கையினால் தருவது நல்லது .ஒவ்வொரு முறையும் முதலில் இணைஉணவு தந்து பிறகு தாய்ப்பால் தரவும் .



இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவினை மாற்றி மாற்றித் தரலாம் சாப்பிட விருப்பமில்லைஎன்றால் மறுபடியும் அடுத்த முறை முயற்சி செய்யலாம். சிறிது சிறிதாக அளவினை அதிகரிக்க வேண்டும். டப்பா உணவுகள் கட்டாயம் தேவையில்லை டப்பாவில் அடைத்து விற்கப்படும் உணவுகள் அரிசி அல்லது கோதுமையை வேகவைத்து சர்க்கரையினைச் சேர்த்து அதனுள் பழமோ காய்கறிகளையோ பருப்போ சேர்த்து தயாரிப்பவை. நாம் வீட்டில் தயாரிக்கும் அரிசி சோறு அல்லது உப்புமாவுடன் பழம் காய்கறிகள் பருப்பு சேர்த்ததைப் போன்று தான்







கடைகளில் கிடைக்கும் சத்துமாவு பொடிகளை தர வேண்டுமா? என்றால் தேவையில்லை. எளிதில் சத்து மாவு பொடிகளை தயாரிப்பது பற்றிய செய்முறை விளக்கத்திற்கு ஐஐடி மும்பை ஸ்போக்கன் ஹெல்த்தில் பார்க்கவும் அதனை பயன்படுத்தி நீங்களே தயாரித்து குழந்தைக்கு தரலாம் .குழந்தை உணவினை தொடர்ந்து சாப்பிட்டு பழகிவிடும் உணவு பழக்குவது எளிது . எனவே குழந்தைக்கு உணவு ஊட்டுவது என்பது எளிதான காரியமாகும்.. போதுமான சத்துக்கள் கிடைத்து குழந்தையின் வளர்ச்சியும் மிக நன்றாக இருக்கும்.

குழந்தைநலம் குடும்ப பலம்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from childhealthtoday-childhealth wiki

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading