விளையாட்டு
பெற்றோர்கள் செய்யும் அடுத்த முக்கியமான தவறு ,குழந்தைகளுக்குப் போதுமான நேரத்தை விளையாடுவதற்கு ஒதுக்காதது தான். வீட்டில் மட்டுமல்ல அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இது நடக்கிறது
அதுவும் மாணவனுக்குப் பொதுத்தேர்வு( பத்தாவது பன்னிரெண்டாவது )வந்து விட்டால் அனைவரும் பரபரப்பாகி விடுகிறார்கள். மூச்சு விடுவதற்கு கூட நேரம் தராமல் வரிசையாக வகுப்புகள் .காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை .இதைத்தாண்டியும் வகுப்புகள் உண்டு, உறைவிட பள்ளிகளில். இரவு 11 மணி வரை படித்தல், ஒப்புவித்தல் ,எழுதுதல் ,திரும்பப் படித்தல்.
புரிந்து கற்பதைப் பற்றிக் கவனத்தில் கொள்ளாமல் நெட்டுரு போட்டு மனனம் செய்ததைத் தாளில் எழுவதற்கான பயிற்சிகள் வெகு வேகமாக நடக்கின்றன. ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்கி விடாமல் அனைத்து வினாடிகளுக்கும் ஏதோ ஒரு பாடம், ஏதோ ஒரு தேர்வு ,சீராய்வு ,மறுமுறை படித்தல், படிக்கும் நேரம், எழுதும் நேரம் , எழுத்துத் தேர்வு என அனைத்தும் நிரம்ப இருக்கின்றன. குழந்தை பெறும் மதிப்பெண்கள் இந்த வதையைச் சரி செய்து விடும் என்று பெற்றோர் உட்பட அனைவரும் நம்புகின்றனர்.
போட்டித் தேர்வுகள் அதிகமாக உள்ள தற்காலத்தில் பொதுத் தேர்வு வகுப்புக்கு நுழைவதற்கு ஒரு வருடம் முன்பே இந்தச் சித்திரவதை ஆரம்பித்து விடுகிறது.காலம் கண்ணானது;நேரம் டெஸ்ட்க்கு ஆனது என அனைத்து பள்ளிக்கூடங்களும் ஒரு நிமிடத்தையும் வீண் செய்வதில்லை. எல்லா நேரமும் படிப்பு தான் . தூக்கத்திலும் சொல்லித்தர,பள்ளிக்கூடங்கள் இனிமேல் வந்துவிட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை
இந்த சூழ்நிலையில் விளையாட்டு எத்தனை கிலோ?என்ன விலை ?என்று கேட்கும் பள்ளிக்கூடங்கள் தான் 95 சதவீதத்திற்கு மேல். வாரத்துக்கு ஒரு நாள், சில பள்ளிக்கூடங்களில் மாதத்துக்கு ஒரு நாள் என்று கூட விளையாட்டு வகுப்பு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் .
தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கும் குழந்தைக்கு மனத்தளர்ச்சி, சோர்வு ,சலிப்பு தட்டாமல் இருக்க ஒரு நாளைக்க 40 நிமிடம் தருவதற்கு கூட இரக்கமில்லாதவகள் ஆகி விட்டனர் பள்ளிக்கூட நிர்வாகிகள்.
பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அவனுக்கு சிறப்புப்பயிற்சி வகுப்பு ,தொடர்ந்து சிறப்பு வகுப்பின் பள்ளிக்கூடத்தின் வீட்டு பாடங்கள் எழுதுவது பிறகு குழந்தைக்கு என ஒரு அரை – முக்கால் மணி நேரம் தொலைக்காட்சி அல்லது கைப்பேசி என நேரம்போனநேரங்களில் தூங்குவது எனத் தொடர்கிறது.. அடுத்த நாள் அவசரமாக எழுந்து குளிக்காமல் காலைக்கடன் கூடக் கழிக்காமல் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் தான் அதிகம் .இந்த வேக்காட்டுச்சூழ்நிலையில் இருக்கும் குழந்தைகள் பிளஸ் டூ முடித்து வந்து கல்லூரியில் சேரும் போது கட்டுப்பாடு இல்லாமல் அலையும் காளை மாடுகளாக ஆகி விடுகின்றனர் என்ன செய்வது? தடுப்பதற்கு ஆட்கள் இல்லை! தினம் தினம் அட்டவணை போட்டு சித்திரவதை செய்வதற்கு ஆசிரியர்கள் இல்லை!! .எனவே குழந்தைகள் வெகு சீக்கிரமாக பாதை மாறுவதற்கும் உடல்நலம் மனநலம் கெடுவதற்குமான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்
பரிணாம ஆய்வாளர்கள் பல விலங்கினங்களை உற்று நோக்கி ஆராய்ந்து கண்டறிந்த உண்மை ஒன்றுதான் .விளையாட்டு என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்களிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. வளர்ச்சி ,கற்றுக்கொள்தல், வாழ்வியல் பிரச்சனைகளை சரி செய்ய போதுமான ஆலோசனை வழங்குதல், விட்டுக் கொடுத்தல், சேர்ந்து வாழ்தல் பிரச்சனைகளை சரி செய்வதற்கான தீர்வுகளைக் கண்டறிதல், கவலைகளை மறத்தல் ,விடுத்தல் என பல விஷயங்களுக்கு விளையாட்டு மிக முக்கிய உதவியினைப் புரிந்து வருகிறது
விளையாட்டு எப்பொழுது ஆரம்பிக்கிறது? என்று பார்ப்போம். பிறந்த நேரத்திலிருந்து குழந்தை விளையாட ஆரம்பித்து விடுகிறது. முதலில் சுற்று முற்றும் பார்க்கிறது தாயைப் பார்த்து சிரிக்கிறது .தந்தையும் உறவினர்களையும் பார்த்துப் புன்னகை பூக்கிறது. குழந்தையின் புன்னகையால் கவரப்பட்ட அவர்கள் குழந்தையைப் பார்த்துச் சிரித்து அவனோடு விளையாடுவது குழந்தையின் மூளையில், லட்சக்கணக்கான இணைப்பு திசுக்களை உருவாக்க மற்றும் தூண்டுகிறது. இணைப்புத் திசுக்கள் சேர்ந்து கற்றுக் கொள்வதற்கான பாதை ஆரம்பிக்கும் போது அதற்கு ஆரம்ப கட்டமாக விளையாட்டு இருக்கிறது .
குழந்தை வளர வளர வயதிற்கு ஏற்ப விளையாட்டு; வயதுக்கு ஏற்ப பொம்மைகள்;தானே நடக்க ஆரம்பித்த பிறகு தானே விளையாடுகிறது. கற்பனை விளையாட்டுகளை விளையாடுகிறது. அதற்குப் பிறகு வெளியே சென்று விளையாடுகிறது. மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறது. பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்த பிறகு சேர்ந்து விளையாடுவது ,குழுவாக விளையாடுவதுகுழந்தைக்கு இயல்பாக அமைகின்றன. குழு விளையாட்டுகளில் பங்கேற்கும் குழந்தைகள் மிகச்சிறப்பாக புதிய பிரச்சனைகளை எதிர்கொள்ளுதல் ,சமாளித்தல் ,சலிப்பினை போக்குதல், விட்டுக் கொடுத்தல் ,சேர்ந்து ஒத்துழைத்து ஒரு காரியத்தைச் செய்தல் என பல விஷயங்களை இயல்பாகவே கற்றுக் கொள்கின்றன. வெற்றி தோல்வி மனப்பான்மை ,சேர்ந்து காரியத்தைச் செய்தல், ஒற்றுமை ,தோல்வியுற்றாலும் மறு முயற்சி எடுத்து வெற்றி கொள்ளுதல் எனப் பல விஷயங்களை குழு விளையாட்டுகளில் கற்றுக் கொள்கின்றன
குழு விளையாட்டுகளில் மட்டுமல்ல சாதாரணமாக நம்ம வீட்டில் விளையாடுற விளையாட்டுகளிலேயே இந்த குழந்தைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். குழந்தை ஒரு செயலை ச்செய்யும்போது பெற்றோர்கள் அதற்கு ஒரு எதிர்வினை புரிவார்கள். அந்த எதிர்வினையை குழந்தை பார்த்து அறிந்துகொள்ளும். குழு விளையாட்டு இருக்கலாம் அல்லது சைக்கிள் ஓட்டிப் போகும் .அப்புறம் கையில் வண்டி செய்து தள்ளிக் கொண்டு போகும்.இந்த ஒவ்வொரு விளையாட்டும் பல விசயங்களைக் கற்றுக்கொள்வதற்கு உதவி செய்கின்றன
விளையாட்டாக வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் செய்து பழகிட்டோமெனில் இந்த மன அழுத்தம் யாருக்குமே வராது. குழந்தை மனப்பான்மையோடு ஒவ்வொரு விஷயத்தையும் எடுத்துக்கொண்டோம் என்றால், விஷயங்களைக் கற்றுக் கொள்வதற்கும் தோல்வி ஏற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதற்கும் பாடங்களை பெற்றுக் கொள்வதற்கும் மிக உதவியாக இருக்கும்.
விளையாட ஆரம்பிப்பது என்பது வயது வந்ததற்கு அப்புறம், பள்ளிக்கூடம் போனதுக்கு அப்புறம் கிடையாது .எவ்வளவு விரைவில் எவ்வளவு சின்ன வயதில் ஆரம்பிக்கிறோமோ அவ்வளவு சிறப்பு. குழந்தை தானே விளையாடுவதைக் கட்டுப்பாடற்ற விளையாட்டு எனச்சொல்லுவோம். இதற்கான நேரம் இப்போது குறைவாக இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு இருக்கக்கூடிய எல்லா நேரத்தையும் பெற்றோர்களாகிய நாமும் பள்ளிக்கூட ஆசிரியர்களும் எவ்வளவு நேரத்தில்,எவ்வளவு விசயங்களைச் சேர்த்து குழந்தையினுடைய மூளையில் திணிக்க முடியுமோ அது தான் கல்வி என்று ஆகிவிட்டது.
கற்றுக் கொள்வதற்கு மிக உதவியாக இருப்பது விளையாட்டு என்பது நிறைய பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு தெரியவில்லை என்பது சோகமாக செய்தி. கோபத்தில் இருக்கிற குழந்தை கொஞ்ச நேரம் விளையாடுவது மனநிலைச்சமனுக்கு உதவியாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். இது மட்டும் இல்லாமல் வளரும் குழந்தைக்குத்தேவையான முக்கியவைட்டமின் சத்தான வைட்டமின் டி கிடைக்கும்.தினமும் வெயிலில் குறைந்தபட்சம் 40 நிமிடம் , சிறு குழந்தைகள் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்திற்கு மேல விளையாடினால் தான் உடல் மன வளர்ச்சியடைந்து சிறக்கும். எலும்புகள் உறுதியாகும். தசைகள் வலுவடையும். நோய் இல்லாமல் இருப்பதற்கு மிக உதவியாக இருக்கும்
குழந்தைக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் விளையாட்டிற்கு போதுமான நேரத்தைபள்ளிக்கூடங்கள் ஒதுக்குவதில்லை. எந்த வகுப்பில் குழந்தை படித்தாலும் தினமும் 40 நிமிடத்தை குழந்தையினுடைய விளையாட்டுக்கும் மன மகிழ்ச்சிக்கும் ஒதுக்குவது நல்லது. விளையாட்டு ,படிப்பதற்கும் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் குழந்தைக்கு உதவியாக இருக்கும் என்பதை நாம் எப்போது நம்புகிறோமோ !அப்போதுதான் குழந்தைக்குநல்லது நடக்கும். உங்களுக்கு நேரமில்லை .நீங்க இருக்கும் இடம் மிகக் குறுகிய இடம் என்றாலும் கவலைப்படவேண்டாம்.வீட்டுக்கு வெளியே இருக்கக்கூடிய இடத்தில் அல்லது மொட்டை மாடியில் விளையாடலாம் . வீட்டைச் சுற்றி ஓடலாம் வீட்டுக்குள் உட்கார்ந்து எழுந்து உடற்பயிற்சி செய்யலாம் ஜிம்முக்கு தான் போகணும்,பள்ளிக்கூடத்தில் ஒரு கோச்சிங் கிளாஸ்ல சேரணும் என்ற கவலை கிடையாது.முக்கியமாக நீச்சலை கற்றுக் கொள்வது மிக முக்கியம்
எனவே பெற்றோர்களே! குழந்தையின் பள்ளிக்கூடத்துல் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடக்கும்போது குழந்தைக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் விளையாடுவதற்கு ஒதுக்கி இருக்கிறீர்கள் எனக்கேளுங்கள் தினமும் குழந்தைக்கு ஒரு மணி நேரம் அதாவது ஒரு பீரியட்,விளையாடுவதற்கான நேரமாக ஒதுக்க வேண்டும் . சிபிஎஸ்சி 13 வருஷத்திற்கு முன்னரே ஆணையாக வெளியிட்டு விட்டது .ஆனால் ஏதாவது ஒரு வகுப்பிற்கு நேரம் வேணுமெனில் எல்லாரும் கை வைக்கிற ஒரே பாடப்பிரிவு விளையாட்டு வகுப்பு தான்
அதை இனிமேல் செய்யாமல் இருக்க உங்கள் குழந்தை படிக்கும் பள்ளிக்கூடங்களின் நிர்வாகிகளிடம் வேண்டுகோள் விடுங்கள்!! குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 40 நிமிடமாவது குழந்தை விளையாட வேண்டும். தன்னுடைய கவலைகளை மறக்க வேண்டும். உணர்ச்சிகளைப் புதுப்பிக்க வேண்டும் .புத்துணர்ச்சி பெற வேண்டும் .மனக் கவலைகளை ஒழிக்க வேண்டும். உடல் நலம் பெற வேண்டும். நல்ல உறக்கம் வருவதற்கும், நல்ல உணவு உண்பதற்கும், குழந்தைக்கும் தேவையான உடற்பயிற்சியினை விளையாட்டு தான் தரும் .
நினைவில் வையுங்கள்;
பள்ளிக்கூடத்தில் பெற்றோர் ஆசிரியர்கள் சங்கக் கூட்டம் நடக்கும்போது குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அனைத்து குழந்தைகளுக்கும் (பொதுத் தேர்வு கழுவர்கள் உட்பட) ஒரு பீரியட்விளையாட்டிற்கு வேண்டும் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
-மறுபதிவு
முதல் பிரசுரம்; 02\01\ 2023
