குழந்தை பிறந்த முதல் மாதத்தில் நிறைய பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அடிக்கடி வருவாங்க! என்னன்னு? கேட்டீங்கன்னா குழந்தைக்குச் சளி புடிச்சிருக்கு டாக்டர் !தூங்கும் போது குறட்டை சத்தம் வருகிறது! கஷ்டப்படுது பால் குடிக்கிறதுலே சிரமப்படுது! எங்களுக்கும் தூக்கம் இல்ல !
சளி எப்படி பிடித்திருக்கும்? அப்படின்னு கேட்டா
ஒருவேளை குழந்தை பிறந்த உடனே சளியை எடுக்காம விட்டுட்டாங்களா? இல்ல குழந்தைக்கு குளித்த பின் மூக்கு சுத்தம் பண்ணனுமா? தொண்டைக்குள்ள விரலைவிட்டு சுத்தம் செய்யணுமா? நாக்கு வலிக்கனுமா? எப்படி டாக்டர் சளி வந்துச்சு அப்படின்னு கேள்விகளாக்கேட்பாங்க ??
சரிம்மா! குழந்தையை படுக்க வைங்க !அப்படின்னு சொல்லிட்டு நாம குழந்தையை படுக்க வைத்துவிட்டு தாயிடம் சில கேள்விகளைக் கேட்போம் சாதாரணமா, மூக்கு அடைப்பு இல்லாதபோது குழந்தை எப்படிப் பால் குடிக்கிறது? சளி மூக்கில் ஒழுகுதா? காய்ச்சல் இருக்கா? வீட்டில் யாருக்காவது சளிக்காய்ச்சல் இருக்குதா? இந்த நாலு கேள்விக்கு கிடைக்கும் பதிலை வைத்து குழந்தைகளுக்கு சளியா? அல்லது மூக்கு அடைப்பா? அப்படி தெரிஞ்சிக்கலாம் .
வீட்டில் யாருக்காவது சளி இருந்தால் அவங்ககிட்ட இருந்து இந்த குழந்தைக்கு சளி ஒட்டியிருக்கும் காய்ச்சலோ அல்லது தொண்டையில் சத்தம் தொடர்ந்து வருவது இருந்தால் தொந்தரவு தான் .அடுத்த வர்ற கேள்விகள்:
வீட்ல ஒரு நாளைக்கு எவ்வளவு முறை துடைப்பீங்க? தூசு பறக்கவிடுற மாதிரி ஏதாவது பவர்லூம் அல்லது பஞ்சாலை ஏதாவது இருக்கா? குழந்தை இருக்கும் அறையில் பழைய பேப்பர் , துணி குப்பை இருக்குதா? குழந்தை படுக்கிற அறையில் காற்றாடியை எத்தனை நாளைக்கு ஒருமுறை தொடைப்ப்பீங்க ?வீட்ல குழந்தைகளுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அலர்ஜி தும்மல் சிறுவயதிலிருந்து இருக்கா? இப்போதும் இருக்குதா ?
சாதாரணமா காற்றில் இருக்கக்கூடிய கண்ணுக்கு தெரியாத நுண்துகள்கள் தூசிகள் மூக்கினுள் செல்லும்போது மூக்கின் தடுப்பு அரண் வேலை செய்ய ஆரம்பிக்கிறது தும்மல் எடுக்கிறது துசு தள்ளப்படுகிறது.மூக்கில் உள்ள சவ்வுப்படலம் சளி போன்ற திரவத்தை சுரந்து ,தூசு உள்ளே போகாமல் தடுத்துவிடுகிறது.அந்த நீர்ச்சளி கெட்டியாகி மூக்கடைப்பு ஏற்படுகிறது எனவே முதலில் கவனிக்க வேண்டியது வீட்டில் ,தரையில் ,சுற்றுப்புறத்தில், விசிறிக்கு மேலே, தூசு இருக்கிறதா ?என்பதுதான்.
பெற்றோர்களுக்கு அலர்ஜி ஒவ்வாமை இருந்தால் குழந்தைகளுக்கு மிக விரைவிலேயே ஒவ்வாமை வந்து விடும் எனவே இந்த குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் இரண்டு வயது வரைக்கும் பால் ,பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் முட்டை கோதுமை ஆகியவற்றை ஒரு வயது வரை கொடுக்காமல் இருப்பது நல்லது ஏனென்றால் இவைகளில் உள்ள புரதம் அலர்ஜி தன்மையை உருவாக்கும் தைமிக் செல்களை தூண்டுகின்றது
தாய்ப்பால் மட்டுமே 6 மாதங்களுக்கும் ஆறு மாதத்திற்கு பிறகு வீட்டு உணவும் போதுமானது அதிலும் அலர்ஜி உண்டு பண்ணக்கூடிய உணவுகளை தவிர்க்கவேண்டும் தாய்க்கும் தந்தைக்கும் அலர்ஜி இருந்தால் அவர்களுக்கு ஒத்துக் கொள்ளாத உணவுகளை குழந்தைக்கும் தரக்கூடாது .மூக்கு அடைப்பினால் தூங்காத ,பால் குடிக்காத குழந்தைகளுக்கு என்ன செய்யலாம்?
உப்புத் தண்ணீர் அல்லது சலைன் சொட்டு மூக்கில் விடலாம் துணியை விட்டோ, இரப்பரினால் ஆன உறிஞ்சி மூலம் மூக்கை சுத்தம் செய்து மூச்சு விடிவதை சுலபமாக்கலாம். குழந்தைக்கு மூன்று நான்கு மாதம் வரை மூக்கு வழியாக மட்டுமே சுவாசிக்கும் பழக்கம் இருக்கும்(கட்டாய மூக்கு வழி மூச்சர்) அதனால் துவாரத்தில் சிறிது அடைப்பு ஏற்பட்டாலும் மூச்சுவிடுவது சிரமமாக இருக்கும் ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும் கொர் கொர் சப்தம் வரும். எனவே நாம் செய்ய வேண்டியது தூசி சேர்வதைத் தவிர்க்கவேண்டும்.அறையை துடைக்கவேண்டும் .குப்பை சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் ஒவ்வாமை குடும்பத்தில் இருந்தால் பால் பால் பொருட்கள் கோதுமை முட்டையை தவிர்க்க வேண்டும் மூக்கு அடைப்பு ஏற்பட்டவுடன் உப்புநீர் சொட்டு மருந்தை எவ்வளவு முறை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம் பிரச்சனையில்லை
சில குழந்தைகள் பால் குடித்தவுடன் முழுவதும் விழுங்காமல் தொண்டையில் வைத்திருக்கும். உடனே படுக்கப்போடாமல் தோளின் மேல் போட்டு தட்டி பின் படுக்க வைக்க வேண்டும்
.சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே குரல்வளையைச்சுற்றி உள்ள தசைகள் தளர்வாயிருக்கும் அதனால் குழந்தை மூச்சை உள்ளிழுக்கும் போது ஒரு மாதிரி வித்தியாசமான சத்தம் கேட்கும் சில குழந்தைகளுக்கு மூச்சுக் குழாயிலும் சில இடங்களில் குறுகல் உருவாகியிருக்கும்
இந்தப் பிரச்சினைகள் எவ்வளவு தொல்லை செய்கிறது? வளர்ச்சியைப்பாதிக்கிறதா ? அப்படிங்கறது பாத்துட்டு அதுக்கு தகுந்த மாதிரி நாம பரிசோதனைகள், மருத்துவம் செய்ய வேண்டி இருக்கும்