நிலாச்சோறு

ஓடி ஓடி ஊட்டிடுவாள்
உலகம் சொல்லி ஊட்டிடுவாள்
பாடிப் பாடி ஊட்டிடுவாள்
பழக்கம் சொல்லி ஊட்டிடுவாள்
அன்னம் கொஞ்சம் அன்பு கொஞ்சம்
கிண்ணம் நிறைய ஏந்திக் கொண்டு
கதைகள் சொல்லி காவியம் சொல்லி
மன்னன் நீ என்றே ஊட்டிடுவாள்
மழலை மொழியில் மயங்கிடுவாள்
மலராய் புன்னகை பூத்திடுவாள்
பிஞ்சுக் கைகள் கன்னம் கிள்ள
கொஞ்சிக் கொஞ்சிக் காட்டிடுவாள்
வீதி உலா கூட்டிச் செல்வாள்
வானின் நிலா காட்டிடுவாள்
அவள் மனம் நிறையும் வரை
என் வயிறு நிறைத்திடுவாள்
எழுதியவர் : வெ கண்ணன் (4-Jan-14, 7:36 am)

நிலாவைக் காட்டி குழந்தைக்கு சோறு ஊட்டும் போதுஉணவு தொண்டைக் குழிக்குள் சுலபமாக இறங்கும். அண்ணாந்து பார்க்கும் போது கழுத்து நீண்டு விடுவதால் சுலபமாக இறங்கும் என்ற மக்களின் நம்பிக்கை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. நிலாவை காட்டியோ அல்லது கழுத்தை அண்ணாந்து பார்க்க வைத்த பின் தான் உணவை ஊட்ட வேண்டும் என்பது தேவையில்லை. முகம் பார்த்து சிரித்து தலைநின்ற குழந்தைக்கு, ஆறு மாதத்திற்கு பிறகு உணவு ஊட்ட ஆரம்பிக்க வேண்டும் மழை இல்லாததால் ஊட்டும் உணவு சுலபமாக விழுங்கும் வண்ணம் கடைந்தோ வேகவைத்தோ இருக்க வேண்டும் ஒரு தேக்கரண்டியில் எடுத்தால் பஞ்சாமிர்தம் போல் வழுக்கி வரவேண்டும் தண்ணீர் போல சலசலவென்று இருக்கக் கூடாது கையில் கொடுப்பதற்கும் சுலபமாக இருக்க வேண்டும்
. முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பால் குடிப்பதற்கு குழந்தை நாக்கை பயன்படுத்துகிறது. காம்பு மற்றும் கரு வட்டப்பகுதியினை மேலண்ணத்தில் அழுத்தி மார்பகத்தில் தேங்கியுள்ள பாலினை வெளிக்கொணர்கிறது. ஆறு மாதத்திற்கு பிறகு குடல் மற்றும் உணவு மண்டலத்தில் தயாராக இருக்கும் சீரணநீர்கள் . நாக்கை வெளியே தள்ளாத குழந்தையின் போக்கு ஆகியவை வீட்டுஉணவினை தருவதற்கு உதவுகின்றன குழந்தை வேடிக்கை பார்க்கும் போது உணவினை வாயினுள் உள்பகுதியில் வைப்பது எளிது.பல்வேறு விதமான பொழுதுபோக்கு சாதனங்கள் இல்லாத அந்தக் காலத்தில் அனைவருக்கும் அமாவாசை தவிர மற்ற நாட்களில் தயாராக இருந்தது நிலவு. அதனால் நிலவினை காண்பித்து உணவினை ஊட்டுதல் என்பது வந்தது.
நிலவில் உள்ள பாட்டி கால் நீட்டி உட்கார்ந்து இருக்கிறார். வடை சுடுகிறார் என்று கதைசொல்லி ஏமாந்த போது உள்ளே தள்ள எல்லா தாய்மார்களுக்கும் தெரியும்.
இப்போது நிலவு கூட யூடியுப் வீடியோவில் தான் காட்டப்படுகிறது .தூரத்துப் பச்சை என்பது மருத்துவரின் பரிந்துரை சீட்டஇல் ஒன்றாகிவிட்டது. நிலவை பார்ப்பதினால் கண் பார்வை குறை சரியாகும் .கண் பயிற்சி பெறும் தூரப்பார்வை சிறப்படையும் என்பதெல்லாம் நம்பிக்கைகள் மட்டுமே.ஆனால் நிலாச்சோறுக்கு காரணம் மனித இனப்பரிமாணத்தில் இருக்கிறது.
காலம் காலமாக மனித இனத்தில் பல்வேறு சமூகங்களில் இப்புவிமக்களின் வயதான தாயாக பாட்டியாக நிலா இருந்திருக்கிறது என்பது வியப்புக்குரிய விஷயம். நமது ஊரில் மட்டுமல்ல செவ்விந்தியர்கள் இனத்திலும் நிலவில்பாட்டி உட்கார்ந்து இருக்கிறாள் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறாள் நமக்கு உதவுவாள் என்ற நம்பிக்கை மக்களிடையே இன்னும் நிலவுகிறது..

வேறு பல இடங்களில் நிலவில்மனித முகங்களாக முயலாக மரமாக கைகளாக தேரையாக பார்க்கப்படுகின்றன. மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து நம்முடைய நெருங்கிய உறவினராக இருந்தது நிலவுதான் எனவே மனித கற்பனைக்கு மிகப்பெரிய திரையாக வானம் இருந்திருக்கிறது. நிலவில் பார்க்கும் வெளிச்சம் உள்ள பகுதிகளில் மலைகள், இருட்டான பகுதிகள் கடல்கள் எனப்படுபவை. நிலவின் கோடுகளிலும் வளைவு நெளிவு சுளிவுகளையும் மனதிற்கு வித்தியாசமான உருவங்கள் தோன்றுவதற்கு காரணம் நமது மூளையின் பெரிடோலியா (pareidolia) எனப்படும் இல்லாத ஒன்றை இட்டுக் கட்டும் வேலை.
அமெரிக்காவில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடந்தது.கம்ப்யூட்டர் மூலம் உருவாக்கப்பட்ட தொடர்பற்ற கோடுகளை வடிவங்களைக் காண்பித்தனர்.50 % பேர் அதில் ஒழுங்கான ஒரு வடிவத்தினையும் உருவத்தினையும் கண்டனர்.
கார்ல் சேகன் தன்னுடைய புத்தகத்தில் சொன்னதுபோல் உருவங்களை காண்பது என்பது பரிணாம வளர்ச்சியில் குழந்தைக்கும் மனித இனத்திற்கும் உபயோகமான விஷயமாக இருந்தது. ஒழுங்கற்ற பொருட்களிலிருந்து கிடைக்கும் தரவுகள், வழக்கமான பொருள்களில் இருந்து கிடைப்பதை ஒத்தது தான் இதற்கு காரணம். மூளையைப் பொருத்தவரை நாம் பார்க்கும் அனைத்தும் கோடுகளும் வடிவங்களும் நிறங்களுமே. அறிவியல் பூர்வமாக இது மூளையின் உடைய திசுக்களின் உள்ளிணைப்பு மட்டுமே
ஆனால் பல்லாயிரக்கான ஆண்டு காலமாக மனித இனத்தின் பண்பாடு கதை மற்றும் நம்பிக்கைகளின் உறைவிடமாக நிலா இருந்தது. இரவு வானம் கதைசொல்லி களுக்கு மிகப்பெரிய மைதானம். நிறைய குறிப்புகள் துணுக்குகள் சொல்லவும் அதனை நினைவில் கொள்ளவும் நிலவை காண்பித்து கதைசொல்லி சோறு ஊட்டுவது என்பது வழக்கமாயிற்று ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு இச் செய்திகளை தொடர்ந்து சொல்லித் தருவதும் நிலவைப் பார்த்து சோறு ஊட்டுவதன் மூலமாக நடந்தது என்பது அறிவியல் வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. நிலாச்சோறு மனித இனத்தின் செய்திக்கடத்தி கருவியாகவே இருந்திருக்கிறது
படங்களுக்காக கூகுளிற்கு நன்றி
