குழந்தைகள் வயதில் அதீதக் குற்றமாக செய்யக் கூடிய சில நிகழ்வுகள் பற்றிக் காண்போம். குழந்தைகள் செய்யக் கூடிய குற்றச் செயல்களில் முக்கியமானது திருடுதல். தெரிந்து திருடுதல், தெரியாமல் திருடுதல் என்ற வேறுபாடு உண்டு. மிகச் சிறிய குழந்தைகள் ஆசைப்பட்டு ஒருவருடைய பொருளை எடுப்பது, தெரிந்தே மற்ற குழந்தைகளுடைய பொருட்களை எடுப்பது, மற்ற குழந்தைகளின் பையில் இருக்கும் பணத்தைத் திருடுதல், வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் பணத்தை எடுத்து ஏதாவது செலவு செய்வது எனப் பல வகையாகப் பரிணமிக்கும். பெரும்பாலும் பெற்றோர் வாங்கித் தர மறுத்த பொருட்களை வாங்குதல், சில பதின்மவயது குழந்தைகள் புகைப்பிடிக்கும் குழந்தைகளுடன் பழக்கம் இருந்தால் சிகரெட் வாங்கிப் பயன்படுத்துவதற்காக திருடுவது என காரணம் எதுவாயினும் திருட்டு திருட்டுதான். இந்த மாதிரியான குழந்தைகளைப் பேசிச் சரி செய்வது மிக அவசியம். அடுத்ததாக தனி நபராக பிறரை அடித்துத் துன்புறுத்துவது அல்லது பலருடன் கூட்டு சேர்ந்து அடிப்பது, பொருட்களைப் பிடுங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவது. அடிதடிகளில் ஈடுபடுபவர்கள் கொலை செய்யும் அளவுக்கும் செல்வது உண்டு. மற்றவர்களை துன்புறுத்தி சந்தோஷம் படக்கூடியவர்களும் உண்டு. பெண்களை, வயதானவர்களைத் துன்புறுத்துவது மட்டும் இல்லாமல் மிருகங்களையும் துன்புறுத்துவது. எந்த வகைக் குற்றச் செயலாக இருந்தாலும் குழந்தைகளின் வயதை பொறுத்து அவர்களுக்கு ஏற்ற தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற குழந்தைகளின் செயல்களால் அவர்களின் குடும்பம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களைச் சார்ந்த சமூகமும் பாதிக்கப்படும் .ஆகையால் இக்குழந்தைகளை கண்காணித்து முழுமையாகச் சரிசெய்வது அனைவரின் கடமையாகும்.
