
ஸ்மார்ட் நூலிலிருந்து
பெண் குழந்தையின் உடலில் முதலில் கவனிக்கப்படுவது மார்பகங்கள். 8-11 வயதில் மார்பக வளர்ச்சி தொடங்கும். ஒரு பக்கத்தில் லேசான வலியோடு பெரியதாக ஆரம்பிக்கும். மார்பக வளர்ச்சி பெண்குழந்தை, பெரியவளாகப் போவதின் ஆரம்ப அறிகுறி. உடலின் இயக்கு நீர்களினால் (ஹார்மோன்களால்) இந்த மாற்றம் ஏற்படும். பயப்படவேண்டாம்.

மார்பின் வளர்ச்சி : மார்பின் அளவு என்பது உடலில் சுரக்கும் இயக்குநீர் மற்றும் கொழுப்பினைப் பொருத்தது. இதனைக் கட்டுப்படுத்த முடியாது. பெரியதோ சிறியதோ ஏதும் செய்யமுடியாது. எந்த உடற்பயிற்சியும் இதனை மாற்றாது. இது இயல்பானது; கவலைவேண்டாம்.
பெண்மை மிளிர, உடல் உறுப்புகள் வளரும், எடை, உயரம், இடுப்பளவு அதிகரிக்கும். அந்தரங்க உறுப்புகள் மற்றும் அக்குள் பகுதியில் முடிவளர்ச்சி ஆரம்பிக்கும்.

மாதவிலக்கு : கருப்பையின் உள்திசு, மற்றும் கருமுட்டையின் எச்சம் இரத்தத்துடன் மாதவிலக்கு இரத்தபோக்காக வெளிவரும். 3-5 நாட்களுக்கு இருக்கும். பருவமெய்திய முதல் 1வருடத்திற்கு ஒழுங்காக இருக்காது. சிலருக்கு உடல் அசதி, தலை மற்றும் உடல்வலி, மார்பகம் மற்றும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், பசியில் மாற்றம், கவலை, துடுக்குத்தனம், தாழ்வு மனநிலை, இந்த சமயத்தில் இருக்கலாம்.
இனிப்பு, சாக்லேட், அதிக உப்பிட்ட உணவுகளைத் தவிர்க்கவும். உடற்பயிற்சி செய்யலாம். சரிவிகித உணவு உண்ணவும். மாதவிலக்கு நாட்களில் தினம் இருமுறை குளிக்கவும். சுத்தமான துவைத்த, பருத்தியிலான உள்ளாடை அணியவும்.

சானிடரி நாப்கின் (அ) சுத்தமான துணி வைப்பது உங்கள் விருப்பத்தினைப் பொறுத்தது. இரத்தப்போக்கின் அளவை பொறுத்து அதனை மாற்றிக் கொள்ளவும். கழிவறை சென்று வந்தபின் குத்துக்காலிட்டு அமர்ந்து தொடையிடுக்கு, அந்தரங்க உறுப்பு பகுதிகளை கழுவவும். மாதவிலக்கையொட்டிய பதற்றம் (Premenstrual tension) உடல், மனது மற்றும் நடத்தைகளில் சில மாற்றங்களை விளைவிக்கும். இதனால் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். மருந்து மாத்திரை தேவையில்லை. அனுசரணையாக இருந்தால் போதும்.
