குழந்தை நெறு நெறு என்று பல்லைக் கடிப்பது பெற்றோர்க்கு பயத்தினைத் தரலாம்.. தூக்கத்தில் மற்றும் விழித்திருக்கும்போது பல்லை நெறு நெறு எனக் கடித்துக் கொண்டு இருப்பது எதனால் என்ற கேள்வி உங்களுக்கு இருக்கலாம்.. பல் கடிப்பதால் குழந்தைக்குப் பூச்சி மருந்து கொடுக்க வேண்டுமா? குழந்தைக்கு ஒரு வயது முதல் 19 வயது தொடங்கும் வரை வருடத்திற்கு இரு முறை பூச்சிமருந்து கொடுத்தால் போதுமானது, மற்றபடி பல் கடித்தால், முகத்தில் வெள்ளைத் தேமல் இருந்தால், மலம் கழிக்கும் இடத்தில் பிய்ப்பு, அரிப்பு இருந்தால் பூச்சிமருந்து தரத் தேவையில்லை. சத்துக் குறைபாடு இருந்தால் மட்டுமே சத்து மருந்துகள் உபயோகமாக இருக்கும். குழந்தை அடிக்கடி பல்லை நெறித்துக் கொண்டே இருக்கும், தூங்கும் போதும் இது நடக்கும் இதற்குப் பல காரணங்கள் இருக்கும். குழந்தைகளின் வாயின் அமைப்பு, மேல் வரிசைப் பல் கீழ் வரிசைப் பல் சரியாக அமையாமல் இருந்தால், தூங்குவதற்கு முன்னால் குழந்தையின் மனதில் ஏற்பட்ட ஏதோ பயம், கனவு, முந்தைய கவலை, மனத்தளர்ச்சி எனப் பல காரணங்களால் சரியாகத் தூங்காமல் இருக்கலாம்., தூங்கிய பிறகு சிறிது நேரத்தில் பல்லை நெறிக்க ஆரம்பித்து விடும். எழுப்பி விட்டால் கொஞ்ச நேரம் நெறிக்காமல் இருக்கும், மீண்டும் நெறிக்க ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க குழந்தை தூங்குவதற்கு முன்னால் சண்டை போடாமல் பார்த்துக் கொள்வது, தொலைக்காட்சி, செல்பேசி, கணினி போன்ற திரைகளைப் பயன்படுத்துவது, அதில் விளையாடுவது போன்றவை தூங்குவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நிறுத்தப்பட வேண்டும். குழந்தைக்குச் சரியாக தூக்கம் வரவில்லை என்றால் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பாட்டவும். உணவை 1 1\2 மணி நேரத்திற்கு முன்னதாகக் கொடுத்தால் உணவும் ஓரளவு செரிமான ஆகி குழந்தை நன்கு தூங்குவதற்கு உதவியாக இருக்கும். பல் பிரச்சினையாக இருந்தால் பல் மருத்துவரிடம் காண்பித்துச் சரி செய்யவும்.மேற்சொன்னவைகளைச் சரி செய்தாலே குழந்தை அடிக்கடி பல் நெறிக்காது.
