Site icon childhealthtoday-childhealth wiki

குழந்தைகளுக்கு வரும் சாதாரண நோய்களுக்கு என்ன முதலுதவி?

ஸ்மார்ட் நூலிலிருந்து

1. தொடர்ந்து அழும் குழந்தை

குாந்தை அழுவதற்கு, வயிற்றுவலி, உடல்நலப் பாதிப்பு, காதில் நீர், மலச்சிக்கல், தொண்டை நோய்த்தொற்று, ஆசனவாய்ப்புண், கண்ணில் தூசி, காய்ச்சல், அதிகக்குளிர், குளிர்ந்த உடை (சிறுநீர் / மலம் போன்றவைகளால்) பூச்சிக்கடி, அரிப்பு என எதுவேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். அலுத்துப்போனாலோ, சங்கடமாக இருந்தாலோ, வெளியே போக விரும்பினாலோ,  தூக்கம் வந்தாலோ, குழந்தை அழலாம். ˜ அழும் குழந்தையை சமாதானப்படுத்தி தூங்கவைப்பது, தோளின்மேல் போட்டு நடப்பது, அரவணைப்பது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது, அதிகமாக தொந்தரவு செய்யாமல் இருப்பது எனப்பல வழிகளில் அழுகையை குறைக்கலாம். அழுகையின் தீவிரம் அதிகமானால் பரிசோதனைக்கு வரச்சொல்லவும். அழுவதைத் தவிர்க்க, வசம்பு, ஜாதிக்காய், உரமருந்து தரக்கூடாது.

  2. ஆஸ்துமா

image courtesy asthma uk

ஆஸ்த்மா எனப்படும் இளைப்பு, ஏங்கல் நோய் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். எளிதில் பரவக்கூடியதோ அல்லது தொற்றுநோயோ அல்ல. நோய் தூண்டும் காரணிகள் தோல் செதில்கள், தூசி, குப்பை, அடுப்பு புகை, சிகரெட், வாகனப் புகை, மகரந்தம், வளர்ப்பு பிராணிகளின் முடி, கரப்பான் பூச்சி கழிவு, வாசனை பூச்சு, பெயிண்ட் வாசனை, குறிப்பிட்ட உணவு வகைகள், பூஞ்சைக்காளான், நோய்க் கிருமி பாதிப்பு, மனநிலை மாற்றம், தட்பவெப்பநிலை மாற்றம் ஆகியவை தூண்டும் காரணிகளில் சிலவாகும்.  உங்கள் குழந்தைக்கு நோய்க்காரணி எது என்று தெரிந்தால் அதனைத் தவிர்க்கவும்

. உடற்பயிற்சி, விளையாட்டு, யோகாசனம் உடல் வலிமையைத் தரும். மூச்சுப்பயிற்சி, தியானம், மூச்சுவிடும் திறனை அதிகரிக்கும். குறிப்பிட்ட சிலருக்கு மருத்துவர் பரிந்துரைக்கும் இன்ஹேலர்,  நோயினைக் கட்டுப்படுத்தச் சிறந்த மருந்து. ஆபத்தானது அல்ல ; அடிமைப்படுத்தாது. குறிப்பிட்டபடி தொடர்ந்து மருந்தினை உபயோகித்து மருத்துவர் ஆலோசனையின்படி முன்னேற்றம் ஏற்பட்டபின் குறைக்கலாம் அல்லது தொடரலாம்.

3. தீக்காயம், வெந்தகாயம்

சம்பவம் நடந்த இடத்தை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து / எடுத்து செல்லவும். குழந்தையின் துணியினைக் கழற்றவும். தோலோடு ஒட்டி இருந்தால் விட்டுவிடவும். அணிந்துள்ள நகை / கடிகாரம் கழற்றவும். நீர்க்கொப்புளத்தை உடைக்கவேண்டாம். ஓடும் குழாய்த் தண்ணீரின் கீழே 20 நிமிடம் தீக்காயம் ஏற்பட்ட பகுதியினை, வைக்கவும். தீக்காயத்தை குளிரவைத்து, ஒட்டாத காயக்கட்டினை இறுக்கமின்றி போடவும். ஐஸ், குளிர்ந்த நீர், வெண்ணெய், களிம்பு, பவுடர், மஞ்சள், அரிசி மாவு, பேனா மை மேலே போடுவது நோய்த்தொற்றினை ஏற்படுத்தும். தீக்காயம் 2 1/2 செ.மீ அளவினை விட பெரியதாகவோ, ஆழமாகவோ ரணமாகவோ அல்லது கொப்புளித்திருந்தாலோ மருத்துவரைச் சந்திக்கவும். குழந்தையின் கையளவை விட ஏற்பட்ட தீக்காயம் அதிகமாக இருந்தால் (அ) முகம், மூச்சுப்பாதை, கைகள், பிறப்பு உறுப்புகள், பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவமனைக்கு உடனே கூட்டிச் செல்லவும்.

4. நாய்க்கடி

image courtesy Daily mail

கடிபட்ட இடத்தைச் சுத்தமான தண்ணீர் கொண்டு சோப்பினால் கழுவவும். காயத்தின் மேல் எதையும் போடக்கூடாது. சுத்தமான பஞ்சு (அ) துணி வைத்து அழுத்தம் தரவும். மருத்துவரை அணுகி வெறிநாய்க்கடி நோய் (சுயbநைள) உடனடி எதிர்ப்பு / தடுப்பு ஊசி தருவதைப் பற்றி ஆலோசிக்கவும். 5. தேள்கடி தேள்கடியின் விஷம், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கடிவாயினை தண்ணீரால் சுத்தம் செய்யவும். வலி அதிகமாக இருந்தாலோ, உடல் குளிர்ச்சி அடைந்தாலோ, குழந்தை மயக்கமடைந்தாலோ, வேர்த்தாலோ, உடனடியாக மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லவும். பாடம் போடுவது, எந்திரம் கட்டுவது, மந்திரித்து கயிறு கட்டுவது என நேரத்தை வீண் செய்யவேண்டாம்.

6. இரத்தக்காயம்

image courtesy Times star

இரத்தத்தை பார்த்த உடன் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயப்படலாம். சுத்தமான துணியால் இரத்தம் கசியும் இடத்தை கட்டவும். இரத்தம் தானே உறைந்து விடும். காயத்தின் மேல் மஞ்சள் தூள், காபித் தூள் வைத்தால் சீழ் கோர்த்துவிடும். எனவே வைக்கக்கூடாது.

7. மூக்கில் இரத்தக்கசிவு

image courtesy Wiki

மூக்கில் இரத்தக்கசிவு ஏற்படுவது மிகவும் இயல்பு. கசிவு ஏற்பட்ட பகுதியினை மூன்று நிமிடம் அழுத்தமாக பிடிக்கவும். தானே இரத்தக்கசிவு நின்றுவிடும். பின், மருத்துவர் ஆலோசனை பெறவும். குழந்தை மூக்கு சிந்துவதையும், மூக்குத் துவாரத்தினுள் விரலை நுழைப்பதனையும் தவிர்க்கவேண்டும்.

8. கண்ணில் தூசி

image courtesy sankara nethralaya

கண்ணில் மண், சிறுபூச்சிகள் பட்டால் கண் சிவந்து வீங்கி விடும். கண்ணைத் தேய்க்கக் கூடாது. தூய்மையான குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவவும். கூர்மையான பொருளைக் உபயோகித்து தூசி, சிறுபூச்சிகளை எடுக்க முயற்சிக்கக் கூடாது.

9. நஞ்சு விழுங்கிய குழந்தை

image courtesy first aid for life

குழந்தையின் வாயில் மீதமிருக்கும் விஷப் பொருளையும் மாத்திரையையும் விரல் கொண்டு வெளியே எடுக்கவும். அருகில் உள்ள மருந்துக் குப்பி, மாத்திரை அட்டை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு உடனே செல்லவும். அதைப் பார்த்து என்ன மருந்து? எவ்வளவு அளவு சாப்பிட்டது? என்பதை தெரிந்து விஷத்தை வெளியே எடுக்கவும், விஷ முறிவு மருந்து தரவும் முடியும்.

10. தவறிவிழுந்த குழந்தை

கீழே விழுந்த குழந்தைக்கு வாந்தி வருகிறதா? வலிப்பு வருகிறதா? உங்களை அடையாளம் கண்டுபிடிக்கிறதா? மயக்கமாக இருக்கிறதா? சுயநினைவு இழந்திருக்கிறதா? எனப் பார்க்கவும். இவை மூளைக் காயத்தின் / மூளை இரத்த கசிவின் அறிகுறிகள்.  உடனே மருத்துவரிடம் செல்லவும். விழுந்தபின் கை கால்களை அசைக்கவில்லை என்றால் மூட்டு, தசைப் பிசைவு, எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். குழந்தையின் கை கால்களை இழுப்பதோ நீவுவதோ ஆபத்தானது. பாதிக்கப்பட்ட பகுதியை அதிகம் அசைக்காமல் வைக்கவும். பின், மருத்துவரை பார்க்கவும்.

Exit mobile version