அழும் குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக தேன் ரப்பர் சூப்பான் இவைகளைப் பயன்படுத்தலாமா? என்ற சந்தேகம் நிறையப் பெற்றோர்களுக்கு உள்ளது. வெளிநாட்டிலுள்ள மருத்துவச் சங்கங்கள் இவைகளைப் பயன்படுத்தலாம் எனச் சொல்லி இருக்கும் பொழுது நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்கிறீர்கள் என உங்களுக்குச் சந்தேகம் வரலாம். இவைகளைப் பயன்படுத்தினால் ஏதாவது பிரச்சினைகள் வருமா? பயன்படுத்தலாமா? அழும் குழந்தையைச் சமாதானப்படுத்துவதற்கு என்ன செய்யலாம்? என்று பார்ப்போம் . இரவு நன்றாக தூங்கிப் பழக குழந்தைக்கு முதல் மூன்று மாத காலங்கள் ஆகும். அதுவரை குழந்தை எந்நேரம் வேண்டுமானாலும் அழும் .எப்பொழுது வேண்டுமானாலும் தூங்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் தனியாக இருக்கும் பெற்றோர்கள் தேன் ரப்பர் ,சூப்பான் பயன்படுத்தலாம் என நினைப்பார்கள். ரப்பர் நிப்பிளை குழந்தை பயன்படுத்தினால் பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்படியே பயன்படுத்தலாம் என்று நினைத்தாலும் முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே இதை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாயிடம் நன்றாக பால் குடித்து பழகிய குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அப்படி பயன்படுத்த தொடங்கிய குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்குப் பிறகு படிப்படியாக அதை பயன்படுத்துவதை மறக்கச் செய்ய வேண்டும் என அறிவுறுத்து கிறார்கள். இரண்டு வயதிற்குப் பிறகும் தொடர்ந்து தேன் ரப்பர் பயன்படுத்தும் குழந்தைகள் அதை பயன்படுத்தியதன் காரணமாக சரியாக சாப்பிடாமலும் தொடர்ந்து அதை சப்பிக்கொண்டு இருப்பதால் பல் மற்றும் தாடைகளில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தையின் தாய்க்கு வீட்டில் உள்ளவர்கள் சரியான ஆதரவு கொடுத்து குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் போதுமான அளவு நன்றாக தாய்ப்பால் கொடுத்தாலே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.